Published Date: September 25, 2023
CATEGORY: CONSTITUENCY
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கீழ ஆவணி மூல வீதியில், திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக பாதாள சாக்கடை கழிவுகள் சுத்தம் செய்யும் நவீன எந்திர சேவையினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேயர் இந்திராணி தலைமை தாங்கினார். கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு ரோபோடிக் சேவையை தொடங்கி வைத்து பேசினார் .
அப்போது அவர் கூறியதாவது:
மதுரை மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எந்திரத்தை பயன்படுத்தி கழிவுநீர் தொட்டியில் உள்ள கழிவுகளை எடுப்பதற்கு ஐஐடி நிறுவனம் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரோபோடிக் எந்திரம் ரூ.30 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ளது . இந்தக் கருவியின் மூலம் கழிவுநீர் உறிஞ்சு எடுப்பது, ரோபோடிக் மூலம் அடைப்புகள் எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை எந்திரம் மூலம் கண்டறிய முடியும்.
கடந்த 10 ஆண்டுகளாக மீனாட்சி அம்மன் கோவிலில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் மீனாட்சி அம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் . அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார் .
Media: DAILYTHANTHI